வினைத்திட்பம்

பொட்டை அழி
முக்காட்டைத்துற
பர்தாவை தூக்கி எறிந்துவிட்டு
நிர்வாணமாய் வா
நமக்கு முக்கிய
வேலை இருக்கிறது
இன்னும் சில மனிதர்களை
உருவாக்குவோம்.

ஆவல்

நமது திருமணத்தின்போது
உன்னை நான்
என்னை நீ
பிறர் நம்மை
நாம் பிறரை
பார்த்ததைவிட -
எல்லோரும்
காமிராவை பார்த்தது அதிகம்

யாவரும் கேளீர்.....

இப்பொழுதெல்லாம்
எங்கள் ஊரில்
காதலும் இல்லை
கற்பழிப்பும் இல்லை
வருவாய்க்கு உற்ற தொழில்
விபச்சாரம் என்பதால்....
யாதும் எங்கள் ஊரே.

உழவே தொழிலானால்....

நீர் உயர வரப்புயரும்
வரப்புயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்
எல்லாம் சரி...
எங்களுர் விவசாயிக்கு மட்டும்
கூன் உயரும்.

பாரதி

எழுதுகோலை
அங்குசம்
என்றெண்ணி
யானை மிரண்டதால்.....
உன் மரணம்.